மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நெஞ்சுவலியால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #SomnathChatterjee
கொல்கத்தா,
மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜிக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
89 வயதாகும் சோம்நாத் சாட்டர்ஜி இந்திய நாட்டில் அதிக காலம் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான சோம்நாத் சாட்டர்ஜி கடந்த 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மக்களவை சபாநாயகராக இருந்தார். இந்நிலையில் வயது முதிர்வினால் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த சோம்நாத் கடந்த 40 நாட்களாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, வீடு திரும்பிய சோம்நாத் சாட்டர்ஜிக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என மருத்துவமனையில் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.