வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை குட்டி அங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்துள்ளது.

Update: 2018-08-16 05:20 GMT
நாசிக்

மராட்டிய மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதி ஆகும். மனிஷா ஜாதவ் என்ற பெண்மணி இரவு வழக்கம்போல்  தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.

அதிகாலை 5.30 மணியளவில் மனிஷா ஜாதவ் எழுந்தபோது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. கொசு வலைக்குள் குழந்தைகளுடன் சிறுத்தைப்புலிக் குட்டி ஒன்று படுத்து தூங்கிக்கொண்டிருப்பதை கண்ட அவர் நிலைகுலைந்து போனார். இரவில் வந்து சிறுத்தைபுலிக் குட்டி தனது குழந்தைகளுடன் படுத்திருப்பதை உணர்ந்துகொண்டார். சிறுத்தைப்புலிக் குட்டியால் தனது பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று நினைத்த அவர், பொறுமையாக கொசுவலையை விலக்கிவிட்டு 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். பின்னர் இவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தைப்புலி குட்டியை பிடித்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்