தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-07 02:46 GMT
புதுடெல்லி,

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது.அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மந்திரிகள் கூடி ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் மந்திரிசபை கூட்டம் நடந்தது. கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக நடந்த இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது.அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும் புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மாநில சட்டசபை கலைப்பு குறித்த அறிவிப்பை கவர்னர் அலுவலகம் முறைப்படி வெளியிடும் என தெரிகிறது. இந்த கலைப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கானா சட்டசபை கலைப்பு நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமை செயலாளர் சைலேந்திர குமார் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று  மதியம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், தெலுங்கானா மாநில வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. எனவே சட்டசபை தேர்தல் ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன.


மேலும் செய்திகள்