பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சில் உடன்பாடு இல்லை - காங்கிரஸ் விளக்கம்

மணிசங்கர் ஐயரின் கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என பவன் கேரா தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 09:37 GMT

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், "பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அவர்களிடம் அணுகுண்டு இருக்கிறது. அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அங்கு ஒரு மோசமான மனிதர் அதிகாரத்திற்கு வந்து அணுகுண்டை பயன்படுத்திவிட்டால், அதன் பாதிப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மணிசங்கர் பேசியது அவரது சொந்த கருத்து என்றும், அவரது கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடியின் அர்த்தமற்ற பேச்சுக்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மணிசங்கர் ஐயரின் பழைய காணொலியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. அவரது கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அவர் கட்சிக்காக பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தீர்க்கமான மற்றும் உறுதியான தலைமையில், நமது ஆயுதப் படைகளின் வீரத்தால் கடந்த 1971 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உடைந்து சுதந்திர வங்கதேசம் உதயமானது என்பதை காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசமும் பெருமையுடன் நினைவு கூர்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 1974-ம் ஆண்டு மே 18-ந்தேதி இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியாவின் அணுசக்தித் திறன் உலகிற்கு அறிவிக்கப்பட்டதாகவும், நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தேசநலன் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருவதாகவும் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

அதோடு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள பவன் கேரா, "பழைய வீடியோக்களை பயன்படுத்தலாம் என்றால், இதோ, சமீபத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், சீனாவைக் கண்டு இந்தியா அஞ்ச வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்