இறுதி ஊர்வலத்தில் கண்கலங்க வைத்த காட்சி ‘பிரனாய்யை அழிக்க முடியும், காதலை அழிக்க முடியாது’

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரனாய்யின் இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Update: 2018-09-17 12:32 GMT

தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த  பிரனாய்- அம்ருதா ஜோடியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அம்ருதாவை  மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பிரனாய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பிரனாயின் தலையில் தாக்கியுள்ளார்.

தன்னை காத்துக் கொள்ள அந்த நபருடன் பிரனாய்சண்டையிட்டபோதும்,பிரனாயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார்.  தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்படுவதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

ஆனால் மற்றொரு பெண் அம்ருதாவை அடிப்பதற்கு துரத்தியுள்ளார். அப்பெண்ணிடம் இருந்து தப்பிப்பதற்காக அம்ருதா ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரனாயி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரணையில், அம்ருதா உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்றும், தாழ்ந்த சாதியை சேர்ந்த பிரனாய் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அம்ருதாவின் தந்தை ஆட்களை வைத்து பிரனாய்யை கொலை செய்துள்ளார் என பிரனாயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.



பிரனாய்  வெட்டி கொலை செய்யப்பட்டபோது, அந்த காட்சிகள் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் பதிவான கூலிப்படையை சேர்ந்தவர்களின் உருவத்தை வைத்து போலீஸார் துப்பு துலக்கினர்.  இதைத்தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாருதி ராவ் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ‘‘எனது மகள் அம்ருதா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. அவர் கர்ப்பமுற்று இருப்பதாக தகவல் கிடைத்ததும் எனது ஆத்திரம் அதிகமானது. எனது மகளுக்கு குழந்தை பிறக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் மருத்துமனைக்கு சென்று கர்ப்பத்தை கலைக்குமாறும், பணம் தருவதாகவும் கூறினேன். ஆனால் டாக்டர்கள் உடன்படவில்லை. இதன் பிறகு எனது மகளை மிரட்டினேன். குழந்தை பெற்றெடுத்தால் கணவனை கொன்று விடுவாக கூறினேன்.

எனது மிரட்டலை மகள் அலட்சியம் செய்ததால் கடும் கோபத்துக்கு ஆளாகி பிரனாய்யை  கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தினேன். எனது சொத்து முழுவதும் அழிந்தாலும் பரவாயில்லை, ஒரு கோடி ரூபாய் தருவதாக கூலிப்படையிடம் தெரிவித்தேன்’’ எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மிர்யலாகுடாவில் பிரனாய்  இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தாங்களாக முன்வந்து கலந்துகொண்டனர். ‘பிரனாய் அமர் ரஹே’, பிரனாய்யை அழிக்க முடியும், காதலை அழிக்க முடியாது (பிரனாய் என்றால் இந்தியில் காதல் என்று பொருள்) என்ற பதாகைகளுடன் ‘ஜெய் பீம்’ முழக்கங்கள் மிர்யலாகுடா பகுதியின் மூலை முடுக்குகளிலும் ஒலித்தன.

பிரனாய் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பகுதியில் அம்ருத்தா அமர்ந்திருந்தது அனைவரது மனதையும் கலங்கவைத்தது.

இனி அம்ருதா எங்கள் மகள். அவளை எதற்காகவும் நாங்கள் விட்டுத்தரமாட்டோம். அம்ருதாவும் அவளின் குழந்தையும் இனி எங்களுடன் தான் இருப்பார்கள். அவளுடன் இருந்து பிரனாய் கொலைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம் என பிரனாயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்