பாதுகாப்பு படையினருடன் மோதல்: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சாவு

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 2 பயங்கரவாதிகள் பலியாயினர். மேலும் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

Update: 2018-10-26 22:00 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் வடபகுதியில் அமைந்துள்ள பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட டங்கிவாச்சா சோபூர் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக நேற்று காலையில் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படை, மத்திய ரிசர்வ் படை மற்றும் மாநில போலீஸ் அதிரடிப்படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

குறிப்பிட்ட ஒரு பகுதியை நோக்கி அவர்கள் முன்னேறிய போது அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து வீரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சோபூரில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.

முன்னதாக தெற்கு காஷ்மீரின் 2 வெவ்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்