உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு படை ஏஜெண்டு கைது

உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு படை ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2018-10-27 18:21 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம், குர்ஜா நகரை சேர்ந்தவர் ஜாகித். இவர் அங்கு மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டினார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், ரகசியமாக கண்காணித்தனர். அதில் அவர் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர், பாகிஸ்தானுக்கு 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் வேலை தேடிச்சென்றபோது அந்த நாட்டின் உளவு படையான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதும், பின்னர் இந்தியா திரும்பியதும் ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக செயல்பட தொடங்கியதும் தெரிய வந்தது.

மேலும் அவருக்கு மீரட் கண்டோன்மென்ட், ஹிண்டான் விமானப்படை தளம் ஆகியவற்றை கண்காணித்து முக்கிய தகவல்களை அனுப்பும் பணி, ஐ.எஸ்.ஐ.யால் வழங்கப்பட்டுள்ளது. அவர் ‘வாட்ஸ் அப்’ மூலம் அதை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

அவரது செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் பாகிஸ்தானை சேர்ந்த 19 செல்போன் எண்கள் இடம் பெற்றுள்ளன. அவரிடம் காசியாபாத், மீரட் வரைபடங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.




மேலும் செய்திகள்