சிவலிங்கத்தின் மீதுள்ள தேள் மோடி: சசிதரூர் கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்

சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-10-28 22:15 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “மோடி சிவலிங்கம் மீது உட்கார்ந்திருக்கும் தேள் போன்றவர். நீங்கள் அதனை கையால் அடிக்கவும் முடியாது, செருப்பால் அடிக்கவும் முடியாது என்று ஓர் அமைப்பை (ஆர்.எஸ்.எஸ்.) சேர்ந்த ஒருவர் பத்திரிகையாளரிடம் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “நீங்கள் (ராகுல்) சிவபக்தர் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டாளி சிவலிங்கம் மீது செருப்பை வீசுங்கள் என்கிறார். இது சிவலிங்கத்தை இழிவுபடுத்துவதாக ஆகாதா? இந்து கடவுள்களை அவமதிப்பதை நாடு சகித்துக்கொள்ளாது. இதை சோனியாவும், ராகுலும் அங்கீகரிக்கிறீர்களா? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்