பணமதிப்பிழப்பு நடவடிக்கை : பாகுபாடு இல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்- மன்மோகன் சிங்
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2016 - இதே நாளில்தான் பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்
இந்த அறிவிப்பு வெளியானதுமே ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போய் விட்டது.
ஏடிஎம் வரிசையில் சோறு தண்ணி இல்லாமல் காத்து நின்ற நூற்றுக்கணக்கானோரை உயிரிழக்கச் செய்தது. காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும், ஏடிஎம் மிஷன்களை ரெடி பண்ண 35000 கோடியும், நாட்டின் பொருளாதார இழப்பு 1,50,000 கோடி என கணக்கு கூறப்பட்டு உள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின் ஒரு "கறுப்பு நாள்" என்று விமர்சித்து உள்ளது.
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். இதற்குச் சமூகத்தின் ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். வயது, பாலினம், மதம், தொழில் பாகுபாடு இல்லாமல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வடுக்கள் மற்றும் காயங்கள் தாக்கத்தை அதிக நாட்களுக்கு பிறகும் காண முடிகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி விகிதத்தில் செங்குத்தான வீழ்ச்சிக்கு அப்பாலும் ஆழமான சீர்திருத்தங்கள் இன்னமும் வெளியாகவில்லை.
பொருளாதாரத் தவறான போக்குகள் நீண்ட காலத்திற்கு தேசத்தை எவ்வாறு அழிக்கின்றன மற்றும் பொருளாதார கொள்கைகளை சிந்தனை மற்றும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள இன்றைய தினம் ஒரு எடுத்துக்காட்டாகும்.