தொழிலதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு நிழலுலக தாதா ரவி பூஜாரி மிரட்டல்
மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி கேட்டு நிழலுலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் விடுத்துள்ளார் என தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புனே,
மகாராஷ்டிராவில் வசித்து வரும் தொழிலதிபர் ஒருவர் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், கடந்த நவம்பர் 6ந்தேதியில் இருந்து 12ந்தேதி வரை பலமுறை தனக்கு தொலைபேசியில் அழைப்புகள் வந்தன. மறுமுனையில் பேசிய நபர் தன்னை ரவி பூஜாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
அதன்பின் தனக்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என கூறி மிரட்டினார். அப்படி தரவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அச்சுறுத்தினார் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, தொலைபேசி அழைப்பு விடுத்த மர்ம நபர் மீது போலீசார் ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.