சி.பி.ஐ. இயக்குனர் மீதான குற்றச்சாட்டு பற்றி மேலும் விசாரணை : ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல்

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், அதன் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டனர்.

Update: 2018-11-16 23:15 GMT

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் இவர்கள் மீதான வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சி.பி.ஐ. இயக்குனர் மீதான புகார்கள் பற்றி ரகசியமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அலோக் வர்மாவை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்தது. பின்னர், விசாரணையின் அறிக்கையை அண்மையில் மூடி முத்திரையிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக தாக்கல் செய்தது.

இந்த அறிக்கை குறித்து நீதிபதிகள் அமர்வு நேற்று கூறுகையில், ‘‘இந்த அறிக்கையில் அலோக் வர்மா பற்றி திருப்திகரமாகவும், அதிருப்திகரமாகவும் கூறப்பட்டு உள்ளது. அவர் மீதான கடும் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது. எனவே அவர்களுக்கு அவகாசம் தேவை. இந்த அறிக்கையின் நகல் அலோக் வர்மாவுக்கு அளிக்கப்படவேண்டும். அவர் இதற்கு திங்கட்கிழமைக்குள் பதில் தரவேண்டும். இந்த வழக்கை 20–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும்’’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்