பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் கைது

தன்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது டிரைவர் புகார் கொடுத்தார்

Update: 2024-04-29 04:23 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த பஸ்சை தீபு என்பவர் ஓட்டினார். இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் பட்டம் அருகே சென்ற போது மேயர் ஆர்யா ராஜேந்திரனின் கார், பஸ்சுக்கு பின்னால் வந்தது.

அந்த சமயத்தில் மேயர் காருக்கு வழிவிடாமல் டிரைவர் பஸ்சை ஓட்டியதாக தெரிகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் டிரைவர் அங்குமிங்கும் வளைந்து சென்றுள்ளார். உடனே வேகமாக முன்னேறி சென்ற மேயரின் கார் அந்த பஸ்சை பாளையம் அருகே முந்தி சென்று வழிமறித்தது. அதை தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய மேயர் ஆர்யாவும், அவரது சகோதரனும் டிரைவர் தீபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அந்த டிரைவரும் பேச வாக்குவாதம் வலுத்தது.

இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மேயர் கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் தீபுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது டிரைவர் தீபு புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை.

பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்