ஊழல் குற்றச்சாட்டுக்கு மிக விரைவில் பதில் அளிக்க சி.பி.ஐ. இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் உடனடியாக பதில் அறிக்கை அளிக்கும்படி சி.பி.ஐ. இயக்குநரிடம் சுப்ரீம் கோர்ட்டு இன்று கேட்டு கொண்டுள்ளது.

Update: 2018-11-19 09:36 GMT
புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் குமார் வர்மா மற்றும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி கொண்டனர்.

இந்த நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சி.பி.ஐ. இயக்குனர் மீதான புகார்கள் பற்றி ரகசியமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அலோக் வர்மாவை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்தது. பின்னர், விசாரணையின் அறிக்கையை அண்மையில் மூடி முத்திரையிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக தாக்கல் செய்தது.

இந்த அறிக்கை குறித்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ‘‘இந்த அறிக்கையில் அலோக் வர்மா பற்றி திருப்திகரமாகவும், அதிருப்திகரமாகவும் கூறப்பட்டு உள்ளது. அவர் மீதான கடும் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது. எனவே அவர்களுக்கு அவகாசம் தேவை.

இந்த அறிக்கையின் நகல் அலோக் வர்மாவுக்கு அளிக்கப்படவேண்டும். அவர் இதற்கு திங்கட்கிழமைக்குள் பதில் தரவேண்டும். இந்த வழக்கை 20ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் மூடிய முத்திரையிட்ட உறையில் தனது பதிலை அளிக்கும்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சி.பி.ஐ. இயக்குநரிடம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று கேட்டு கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர நாராயணன், இயக்குநரால் தனது பதிலை இன்று அளிக்க முடியவில்லை என கூறினார்.

இதற்கு பதிலளித்த அமர்வு, விசாரணை தேதியை நாங்கள் மாற்ற போவதில்லை.  நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதில் அளியுங்கள்.  உங்களது பதிலை நாங்கள் படித்து பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்தது.

இதனை அடுத்து வழக்கறிஞர், பதில் அறிக்கை செவ்வாய் கிழமைக்குள் சமர்ப்பித்து விடுவோம் என கூறினார்.

மேலும் செய்திகள்