டுவிட்டர், முகநூலுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு ‘தேர்தல் விதிமுறைகளை மீறவேண்டாம்’
‘தேர்தல் விதிமுறைகளை மீறவேண்டாம்’ என்று டுவிட்டர், முகநூலுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எந்த விதத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களும், பிரசாரங்களும் இடம்பெறக்கூடாது. எனவே தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது.