3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு - நாடு முழுவதும் 26-ந்தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் 26-ந்தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

Update: 2018-12-01 23:15 GMT
ஐதராபாத்,

தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளான மும்பையை மையமாக கொண்டு இயங்கும் தேனா வங்கி, பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் உருவாக்கப்படும் புதிய வங்கி குஜராத்தை மையமாக கொண்டு இயங்குவதுடன், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றுக்கு பிறகு 3-வது பெரிய வங்கியாக இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக மேற்படி வங்கிகள் இணைப்புக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் நேற்று அறிவித்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த அமைப்பில் 9 தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வெங்கடாச்சலம், இந்த தகவலை நேற்று வெளியிட்டார். மேற்படி வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசும், அந்த வங்கிகளும் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் இந்த வேலை நிறுத்த முடிவை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிகளின் 9 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைப்போல மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தேசிய தொழிற்சங்க மாநாடு சார்பில் அடுத்த மாதம் (ஜனவரி) 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திலும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்கும் எனவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்