தொடர்ந்து 17 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட சித்துவுக்கு பேசும் சக்தி பாதிப்பு
தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து 17 நாட்கள் ஈடுபட்ட பஞ்சாப் மந்திரி சித்துவுக்கு பேசும் சக்தி இழக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
சண்டிகார்,
ராஜஸ்தான், சட்டீஸ்கார், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய சட்டசபை தேர்தல்களுக்கான பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான பஞ்சாபின் சுற்றுலா மற்றும் கலாசார விவகார துறை மந்திரி நவ்ஜோத் சிங் சித்து ஈடுபட்டார்.
அவர் கடந்த 17 நாட்களில் 70க்கும் மேற்பட்ட பொது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இதனால் அவரது பேசும் சக்தி பாதிப்படைந்து அதனை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அவர் 3 முதல் 5 நாட்கள் முழு ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவருக்கு தொடர்ச்சியாக ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் சிகிச்சை பெறும் இடம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அங்கு முழு பரிசோதனை செய்து கொண்டு திரும்ப உள்ளார்.
அவருக்கு சுவாச பயிற்சி மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட சிறப்பு மருத்துவம் அளிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றது.