உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் சாவு

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பலர் தங்கள் குடும்பத்தினரின் அஸ்தியை கரைப்பதற்காக சென்றனர்.

Update: 2018-12-11 23:00 GMT
பிரயாக்ராஜ், 

கரையில் இருந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்துக்கு படகில் அவர்கள் சென்றனர். படகில் படகோட்டி உள்பட 16 பேர் இருந்தனர். அவர்கள் அஸ்தியை கரைத்துவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது கீடாகஞ்ச் என்கிற இடத்தில் யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 2 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் 8 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. 

மேலும் செய்திகள்