நகரியில் அறக்கட்டளை சார்பில் 2 ரூபாயில் குடிநீர் வழங்கும் திட்டம்

நகரியில் அறக்கட்டளை சார்பில் 2 ரூபாயில் குடிநீர் வழங்கும் திட்டத்தை நடிகை ரோஜா தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-25 22:30 GMT

நகரி,

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.யான நடிகை ரோஜா தனது பெயரிலான அறக்கட்டளை சார்பில் 4 ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை நகரி பஸ் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இரு இடங்களிலும் தலா 1000 பேருக்கு இந்த சலுகை விலை உணவை வழங்கி வருகிறார். மேலும் வாரச்சந்தை நடைபெறும் விஜயபுரத்தில் வாரத்தில் ஒரு நாள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே நகரியை அடுத்த சிட்லபட்டடை என்ற இடத்தில் 2 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) திட்டத்தை நடிகை ரோஜா தனது அறக்கட்டளை சார்பில் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் ‘ஏழை மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) வழங்குவோம் என சந்திரபாபுநாயுடு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். ஆனால் இதுவரை அவர் அந்த திட்டத்தை தொடங்கவில்லை. நான் எனது சொந்த செலவில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் தற்போது 2 ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டர் திட்டத்தை தொடங்கி உள்ளேன்‘ என்றார்.

மேலும் செய்திகள்