சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்து தெரிவிப்பதை தடுக்க முடியாது - மும்பை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் கருத்து

சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்து தெரிவிப்பதை தடுக்க முடியாது என மும்பை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-01-11 23:00 GMT
மும்பை,

மும்பை ஐகோர்ட்டில் வக்கீல் சாகர் சூர்யவன்ஷி என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பு இருந்து அரசியல்வாதிகளோ, தனிநபர்களோ அரசியல் விளம்பரங்கள், அரசியல் கருத்துகள் வெளியிட தடைவிதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி நரேஷ் பட்டீல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் பிரதீப் ராஜகோபால் கூறும்போது, ஏற்கனவே அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு அரசியல் விளம்பரங்கள் வெளியிடவோ, பிரசாரமோ செய்யக்கூடாது என்று விதிகள் உள்ளது. ஆனால் ஒரு தனிநபர் சமூக வலைத்தளத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து தெரிவிப்பதை தேர்தல் கமிஷன் எப்படி தடுக்க முடியும்? என்றார்.

பின்னர் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பதாகவும், இருதரப்பினரும் இதுதொடர்பான ஆலோசனைகளை வழங்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்