பெற்றோர்கள் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி: மருத்துவமனையிலேயே நடந்த திருமணம்

ஆந்திராவில் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

Update: 2019-01-12 13:11 GMT
விகாராபாத், 

ஆந்திரா மாநிலம் விகாராபாத் மாவட்டம் ரேஷ்மா பேகம் (19), நவாஸ் (21) இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் ரேஷ்மா  பேகத்தின் வீட்டிற்கு தெரிய வந்தது. உடனடியாக ரேஷ்மா  பேகத்தின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களில் வரன் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ரேஷ்மா பேகம் தான் உயிருக்கு உயிராக விரும்பிய அன்பு காதலரை இனி மறந்துவிட வேண்டியது தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதை உணர்ந்தார். இதனால் வேதனையடைந்த ரேஷ்மா பேகம் வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் விகாராபாத்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரேஷ்மா தற்கொலைக்கு முயன்ற செய்தி கேட்ட நவாஸ் (21) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனைக்கு சென்று தானும் அதே போன்றதொரு பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பணியில் இருந்த ஊழியர்கள் நவாஸை மீட்டு சிகிச்சை அளித்தனர்.  இச்சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே, இரு வீட்டாரும் அங்கு கூடி பேசியதாக தெரிகிறது.

இனி இவர்களை பிரிப்பதினால் எந்தப் பயனும் இல்லை என்றறிந்த இரு குடும்பத்தார் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, விகரபாத்தில் இருவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே நவாஸ், ரேஷ்மா பேகம் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்