கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை -பிரதமர் மோடி
கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை என கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கொல்லம்,
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரசுக்கு ஆதரவாக இந்தி மொழி மாநிலங்கள் தற்போது மாறி உள்ள நிலையில், இந்தியாவின் தெற்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் பாஜக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
வரும் பாரளுமன்றதேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி கேரளாவில் இருந்து தொடங்கி உள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது;-
இடதுசாரிகட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். பெயரில்தான் அவை வேறுபட்டவை. கற்பிதங்கள், மதவாதம், அரசியல் வன்முறையில் ஈடுபட்டு கலாசாரத்தை சேதப்படுத்துவதிலும், கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவை ஒரே மாதிரியானவை.
பாரதீய ஜனதா இந்தியாவை மிக விரைவாக வளர்ச்சியடையும் நாடாக உருவாக்கியுள்ளது.
கேரளாவின் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் நடத்தை மிகவும் வெட்ககேடான நடத்தையாக வரலாற்றில் இருக்கும். கம்யூனிஸ்ட்கள் ஆன்மிகத்திற்கும், மதத்திற்கும் ஒருபோதும் மதிப்பு கொடுப்பதில்லை. இது மாதிரியான வெறுப்பை யாரும் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை.
நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்கிறார்கள். பத்தனம்திட்டாவில் இன்னொன்றை சொல்கிறார்கள். ஒரு நாள் ஒன்றும், இன்னொரு நாள் மற்றொன்றும் சொல்கிறார்கள். உங்களது இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது" என்று ஐக்கிய ஜனநாயக முன்னணியை தாக்கி மோடி பேசினார்.