டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது - தேர்தல் ஆணையம்
டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதில் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியுமா? என்பதை ஆஜராகி விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி தேர்தல் ஆணைய வழக்கறிஞர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என பதில் கூறி உள்ளார்.