கர்நாடகாவில் கோவிலில் அல்வா பிரசாதம் சாப்பிட்ட பெண் பலி; 11 பேருக்கு தீவிர சிகிச்சை
கர்நாடகாவில் உள்ள கோவில் ஒன்றில் அல்வா பிரசாதம் சாப்பிட்ட பெண் ஒருவர் பலியானார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் சிக்கபல்லபுரா நகரில் கங்கம்மா தேவி என்ற கோவில் ஒன்று உள்ளது. இங்கு அடையாளம் தெரியாத 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அல்வா பிரசாதத்தினை வழங்கியுள்ளனர்.
இதனை சாப்பிட்ட கவிதா (வயது 28) என்ற பெண் தொடர்ந்து வாந்தி எடுத்து உள்ளார். அவரது உடலில் நீரிழப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டார். அவரின் குழந்தைகள் உள்பட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு 2 பெண்களை கைது செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று முதல் அமைச்சர் எச்.டி. குமாரசாமி உறுதி தெரிவித்துள்ளார்.