மாபெரும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு நாளைக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்-அமித்ஷா
மாபெரும் கூட்டணி என்று கூறிக் கொள்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு நாளைக்கு ஒருவர் பிரதமராக இருப்பார் என பாஜக தலைவர் அமித்ஷா கூறி உள்ளார்.
கான்பூர்
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் பாஜக சுனாமிக்கு உத்தரபிரதேசம் உத்தரவாதம் அளிக்க முடியும். மே மாதத்தில் வாக்குகள் எண்ணும்போது, இங்கு எண்ணற்ற இடங்களில் வெற்றி பெற வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் இப்போது 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் தேர்தலில் 74 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் உறுதியேற்க வேண்டும்
சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் சாதி அரசியல் செய்து வருகிறது. அவர்கள் அமைத்துள்ள கூட்டணி ஊழல் கூட்டணி. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக உறுதிபூண்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் கூட்டணி என்று கூறிக் கொள்பவர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் நாள் ஒன்றுக்கு ஒரு பிரதமர் இருப்பார். திங்களன்று மாயாவதியும், செவ்வாயன்று அகிலேசும், புதனன்று மம்தா பானர்ஜியும், வியாழனன்று சரத்பவாரும், வெள்ளியன்று தேவகவுடாவும், சனியன்று ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள் என கூறினார்.