ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் நடமாடியதாக தகவல் -சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் நடமாடியதாக தகவல் வெளியானது.

Update: 2019-02-05 08:04 GMT
ஜம்மு, 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமான 3 மர்ம நபர்கள்  நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து விடிய விடிய  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சர்வதேச எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டதாகவும் சந்தேகத்திற்கிடமாக யாரையும் கண்டறிய முடியவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெறுகிறதா? என உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்