ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; இடைத்தரகர் மிசெலின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரூ.3,600 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் மிசெலின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2019-02-16 11:38 GMT
புதுடெல்லி,

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.  இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிசெல், துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 4ந்தேதி நாடு கடத்தப்பட்டார்.

அமலாக்க துறையானது பணபரிமாற்ற மோசடி வழக்கொன்றில் மிசெல்லை கடந்த ஆண்டு டிசம்பர் 22ந்தேதி கைது செய்தது.  இவர் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் தாக்கல் செய்த மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.  இதில் சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கைடோ ஹாஸ்க்கே மற்றும் கார்லோ கெரோசா மற்றும் கிறிஸ்டியன் மிசெல் ஆகிய 3 இடைத்தரகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மேலும் செய்திகள்