'வந்தே பாரத்' ரெயில் தாமதம்: பயணிகள் கடும் அதிருப்தி
'வந்தே பாரத்' ரெயில் வர்த்தக ரீதியிலான பயணத்தின் முதல் நாளிலேயே ஒரு மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
புதுடெல்லி,
நாட்டின் முதல் அதிவேகமான ரெயிலை சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை தயாரித்தது. என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சோதனை ஓட்டமாக டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகருக்கு சென்ற 'வந்தே பாரத்' ரெயில், அங்கிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், ‘வந்தே பாரத்’ ரெயில் வர்த்தக ரீதியிலான தனது முதல் பயணத்தை துவங்கியது. வர்த்தக ரீதியிலான பயணத்தின் முதல் நாளே, ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ரெயில் பாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், ரெயில் மெதுவாக சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் காலத்தில், ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படும் என நம்புவதாகவும், பயணம் மிகவும் சவுகரியமாக இருந்ததாகவும் ரெயில் பயணிகள் தெரிவித்தனர்.