பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் : மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதில்

பயங்கரவாதி யாரென்றாலும் ஐ.நா.சபை தடை விதிக்க வேண்டும் என மசூத் அசார் விவகாரத்தில் சவுதி அரேபியா பதிலளித்துள்ளது.

Update: 2019-02-20 14:44 GMT
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்தார். பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உறுதி அளித்தார். 

இந்நிலையில் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அதில் அல் ஜுபியர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பதட்டத்தை தணிக்கும், பிரச்சனையை அமைதியாக தீர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்தஒரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் யாராகினும் ஐ.நா. சபையால் தடை செய்யப்படவேண்டும் (மசூத் அசார் விவகாரம்). ஐ.நா. தீர்மானம் தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையிலான கூட்டறிக்கை, ஜெய்ஷ் இ முகமது தலைவர் அசாருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு எதிரானது கிடையாது. 

இப்போதுள்ள பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் நாங்களாகவே தலையிடமாட்டோம்.  புல்வாமாவில் கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பது முக்கியமானது. அணுஆயுத பலம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை யாரும் விரும்பவில்லை, இதனால் பயங்கரவாதிகளை தவிர யாரும் பயனடையப்போவது கிடையாது” என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்