இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் : டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்திருந்தபோது இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடர தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு விசாரிக்க பட்டியலிட உத்தரவிட்டது. மேலும் தினகரன் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு டெல்லி போலீசுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.