மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்கிறார்கள் - ராகுல் காந்தி
மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினசரி தற்கொலை செய்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒடிசா மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார். பார்கார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்து வருகிறார்கள். விவசாயிகள் மேம்பாடு தொடர்பாக மோடி அரசு அதிகமாக பேசுகிறது. ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடியும் செய்யவில்லை, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவுமில்லை என விமர்சனம் செய்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் நெற்களஞ்சியம் என பார்கார் நகரை குறிப்பிட்ட ராகுல் காந்தி, மத்தியில் உள்ள பா.ஜனதா அரசும், இங்குள்ள பிஜு ஜனதா தளம் அரசும் விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என விமர்சனம் செய்துள்ளார்.