ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் கைது : அமித்ஷா விமர்சனம்

ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை அமித்ஷா விமர்சித்துள்ளார்.

Update: 2019-03-19 07:52 GMT
புதுடெல்லி,

பெங்களூரு, நாகவரா பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மான்யதா தொழில்நுட்பப்பூங்கா. இப்பூங்காவில் 68 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வளாகத்தில் குறிப்பிட்ட சில தொழில்நுட்ப அறிஞர்கள், தொழில்முனைவோர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுடன் அத்துறை சம்பந்தமான பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அவர்கள் தொடுக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) மாலை 5.30-மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் கலந்துகொள்ள ஒருசிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது பலரின் அதிருப்திக்கு காரணமாக அமைந்தது. கலபுர்கியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, பெங்களூருவிலுள்ள மான்யதா தொழில்நுட்பப் பூங்காவுக்கு வருகை தந்த ராகுல் காந்தியை, அதிருப்தி அடைந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், பாஜகவினர் ”மீண்டும் மோடி” என்று முழங்கி வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் கலந்துரையாட அனுமதிக்காததால் ராகுல் காந்தியின் கவனத்தை ஈர்க்க இது போல செயல்பட்டதாகத் தெரிகிறது.  இந்த நிலையில், ராகுல்காந்திக்கு எதிராக கோஷமிட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர். 

இதற்கு பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா தனது டுவிட்டரில், காங்கிரசை விமர்சித்துள்ளார். அதில், கருத்து சுதந்திரத்திற்கான சாம்பியன்கள் எங்கே போனார்கள்? எதிர்காலத்திற்கு வழிகாட்டும் இளைஞர்களை மிரட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்