சாப்ட்வேர் கோளாறு; 155 ஏர் இந்தியா விமானங்கள் இரவு 8.30 மணிவரை காலதாமதமுடன் இயங்கும்

சாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும்.

Update: 2019-04-27 09:49 GMT
புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு அலையன்ஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்களுடன் சராசரியாக 674 விமானங்களை இயக்குகிறது.  சர்வதேச அளவிலான இந்த விமான சேவையானது இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாதிப்படைந்தது.

இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அஷ்வனி லோஹானி கூறும்பொழுது, ஏர் இந்தியாவின் பயணிகள் சேவை சிஸ்டம் (பி.எஸ்.எஸ்.) என்ற சாப்ட்வேர் ஏறக்குறைய 6 மணிநேரம் வரை முடங்கியது.  பயணிகளின் உடைமைகள் மற்றும் முன்பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்யும் இந்த சாப்ட்வேர் செயல்படாத நிலையில், இன்று இரவு 8.30 மணிவரை 155 விமானங்கள் சராசரியாக 2 மணிநேரம் காலதாமதமுடன் இயங்கும்.

இதன்பின் மீண்டும் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.  விமான சேவை பாதிப்பினால் உலகம் முழுவதும் உள்ள பயணிகள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தபடி இருந்தனர்.

மேலும் செய்திகள்