பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #cycloneFani

Update: 2019-05-06 06:25 GMT
புதுடெல்லி,

பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

பானி புயலின்போது 34 பேர் ஒடிசாவில் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர் வசதியின்றியும், மின்சார வசதி இன்றியும் பரிதவித்து வருகின்றனர். பானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று பானி புயலால் கடுமையாக சேதம் அடைந்த பூரி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம், ஆய்வு செய்தார். அவருடன் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் , மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் இருந்தனர். 

புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ஒடிசா மாநிலத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே, ரூ.381 கோடி வழங்கிய நிலையில், கூடுதலாக ஆயிரம் கோடி அளிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்