காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-05-18 22:15 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா அருகே பன்ஸ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். நீண்ட நேர பதிலடிக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், நீண்ட நாட்களாக அவர்களை போலீசார் தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல், வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா மாவட்டம் சோபோர் அருகே ஹதிலங்கோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினார். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் அந்த பயங்கரவாதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். அவர் வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.

காஷ்மீரில் ஒரே நாளில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்