102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில் 37-வது தடவையாக ஓட்டு போட்டார்

இமாசலபிரதேசத்தை சேர்ந்த 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில், 37-வது தடவையாக ஓட்டு போட்டார்.

Update: 2019-05-19 21:45 GMT
சிம்லா,

இந்தியாவின் முதல் வாக்காளராக கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர், ஷ்யாம் சரண் நேகி (வயது 102). இவர், இமாசலபிரதேச மாநிலம் கின்னார் மாவட்டம் கல்பா சினி கிராமத்தில் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.

1951-ம் ஆண்டு, முதல்முறையாக வாக்களித்தார். அதிலிருந்து நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், கிராம பஞ்சாயத்து தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்துள்ளார்.

அதுபோல், 37-வது தடவையாக, நேற்று நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் கின்னார் மாவட்டம் கல்பா வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதற்காக தேர்தல் கமிஷன் சார்பில் அவரை சிறப்பு வாகனத்தில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். முதியவருக்கு வெள்ளை நிற பட்டு கழுத்துப்பட்டை பரிசாக அளிக்கப்பட்டது.

தன் பேரன் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் வெற்றிகரமாக ஓட்டு போட்டார். அப்போது, வாக்குச்சாவடி ஊழியர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

மேலும் செய்திகள்