குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் - பா.ஜனதா தலைவர்

கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

Update: 2019-05-22 13:36 GMT

நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெல்லும் என தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்கிறது. இப்போது தேர்தல் முடிவு பா.ஜனதாவை உற்சாகம் அடைய செய்துள்ளது.  

மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரையில் காத்திருக்க பா.ஜனதா டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜனதா முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா பேசுகையில், கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் எனக் கூறியுள்ளார். 

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜனதா முழு தயார் நிலையில் உள்ளது எனக் கூறியுள்ளார். முதல்வராக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி தோல்வி அடையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் எனக் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்