தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங். செய்தி தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு

தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாதம் பங்கேற்க வேண்டாம் என்று அக்கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டது.

Update: 2019-05-30 03:36 GMT
புதுடெல்லி,

அண்மையில்  நடந்து முடிந்த மக்களவை  தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத சூழல் ஏற்பட்டது.  தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தது. ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில், அடுத்த ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க வேண்டாம் என்று அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ஒரு மாதத்திற்கு டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவே , தங்களது நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம்  என ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்