நாடு முழுவதும் கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் ஒட்டுமொத்த கல்வி முறையையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-06-04 22:30 GMT
புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில், நடப்பு கல்வி ஆண்டில், முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

அதை எதிர்த்து சில மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து, கடந்த 30-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால், அதன்பிறகு மராட்டிய மாநில அரசு, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்தவில்லை.

எனவே, புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து, கவுன்சிலிங் நடத்த உத்தரவிடக்கோரி, சில மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர். அந்த மனு, நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மராட்டிய மாநில அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

கவுன்சிலிங் நடத்தாததால், மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு மராட்டிய மாநில அரசுதான் முழு பொறுப்பு.

மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரி கிடைக்கும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதுபோன்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பது தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு மிகவும் கடினமானது. மாணவர்களின் நிலையை பாருங்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும்.

நாங்கள் மாணவர்களை பற்றித்தான் கவலைப்படுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் நடக்கிறது. மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக, நாடு முழுவதும் ஒட்டுமொத்த கல்வி முறையையும் மத்திய, மாநில அரசுகள் ஒழுங்குபடுத்த வேண்டும்.

இந்த மாணவர்களின் நலனுக்காக, ஜூன் 14-ந் தேதிக்குள் இறுதிக்கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும். அதுகுறித்து பத்திரிகை, ஊடகங்களில் நன்றாக விளம்பரம் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும் செய்திகள்