டெல்லியில் மது விருந்து - 3 பேர் கைது

டெல்லியில் மது விருந்து நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-09 20:24 GMT
புதுடெல்லி,

டெல்லி சத்தார்பூர் பகுதியில் விதிமுறைகளை மீறி மது விருந்து நடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கும் கலால் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசாரும் அதிகாரிகளும் குறிப்பிட்ட அந்த பகுதியில் உள்ள ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனத்துக்கு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த நிறுவனத்தில் உள்ள பிரதான அறையில் விதிமுறைகளை மீறி மது விருந்து நடந்தது தெரியவந்தது.

இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

அங்கு இருந்து 300 மதுபாட்டில்கள், 350 பீர் பாட்டில்கள் மற்றும் போதை மாத்திரைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விருந்துக்கு ஒரு நபரிடம் இருந்து ரூ.500 வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு மது மற்றும் போதை மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.

இந்த விருந்தில் சிறார்களுக்கும் மதுவினியோகம் செய்யப்பட்டு இருப்பதும் கலால் உரிமத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. மது விருந்துக்கு ஏற்பாடு செய்த புல்கித் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்