பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசினார்.

Update: 2019-06-15 06:02 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில்  இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றனர்.

டெல்லி சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமருடன் அவர் விவாதித்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.

மேலும் செய்திகள்