முன்னாள் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பா.ஜ.க. செயல் தலைவராக நியமனம்
முன்னாள் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பா.ஜ.க. செயல் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மோடியை பிரதமராக தேர்வு செய்தது. இதனை அடுத்து கடந்த மே மாதம் 30ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்று கொண்டார். உடன் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற வாரிய கூட்டம் இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்பொழுது, கட்சியின் மூத்த பா.ஜ.க. தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பா.ஜ.க. செயல் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என கூறினார். இதேபோன்று கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா தொடர்ந்து நீடித்திடுவார்.