நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி கருத்துக்கு காங்கிரஸ் பதில்

பிரதமர் மோடியின் கருத்துக்கு, நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

Update: 2019-06-17 23:30 GMT
புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கருத்தும் மதிப்புள்ளது என்று பிரதமர் மோடி கூறியது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

அவசர சட்டம் மூலம் ஒரு சட்டத்தை இயற்றுவது ஜனநாயகத்தில் மிகவும் மோசமான நடவடிக்கை. இதை ஒரு அவசர காலத்தில் தீவிர பிரச்சினைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்தையே அரசு பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து பிரதமர் உறுதி அளிக்க வேண்டும். கடந்த 5 வருடங்களாக அரசால் பின்பற்றப்பட்ட அந்த நடைமுறை மாறுகிறதா என்பதை காண நாங்கள் காத்திருக்கிறோம்.

ஏனென்றால் கடந்த 5 வருடங்களாக நாடாளுமன்றத்துக்கு அவமரியாதை அளிக்கப்பட்டதை தான் நாங்கள் பார்த்தோம். மக்களவையில் தனக்கு உள்ள மூர்க்கத்தனமான பெரும்பான்மை காரணமாகவே அரசு சில சட்டமசோதாக்களை கொண்டுவந்தது. இதற்கு நாடாளுமன்றத்தை ஒரு ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தியது. பெரும்பாலான சட்டமசோதாக்கள் ஆய்வுக்காக நிலைக்குழுவுக்கு அனுப்பப்படவில்லை. இந்த நடவடிக்கை மீண்டும் தொடராது என காங்கிரஸ் நம்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்