ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் வீரர் பலி, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் பலியானார்.

Update: 2019-06-18 04:29 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.  இந்த துப்பாக்கிச்சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு படை வீரரும் பலியானார். 

மேலும், ஒரு பயங்கரவாதி அப்பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என்று நம்பப்படுவதால் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது.  

முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் அரிஹால்-லஸ்சிபோரா சாலையில் நேற்று ராணுவத்தின் ராஷ்டிரீய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அது, துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்படாத வாகனம் ஆகும். ஈத்கா அரிஹால் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.அதேபோல், அனந்தநாக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ மேஜர் பலியானார். 

மேலும் செய்திகள்