காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு -5 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிகுண்டு தயாரித்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-06-19 14:16 GMT
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதிகள் அவ்வப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்பு  சண்டையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷோபியான் மாவட்டம் சைன்போரா என்ற இடத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை சிலர் தயாரித்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் சக்திவாய்ந்த வெடிபொருளை தயாரித்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் உத்தரவுப்படி, வெடிபொருளை தயாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தயாரித்த அதிநவீன வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்