மும்பையில் கன மழை: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
மும்பையில் இன்று காலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால், நகரின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காலை நேரத்தில் மழை கொட்டியதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் மற்றும் விமான சேவை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்கு மும்பையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமேட் தெரிவித்துள்ளது.