பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்தார்.

Update: 2019-07-03 21:47 GMT
பெங்களூரு,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவது பற்றி டி.டி.வி.தினகரன், சசிகலாவிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

பின்னர் வெளியே வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள் மாற்று கட்சிகளுக்கு செல்வது இயல்பு. அப்படி செல்லும்போது விமர்சனங்களை முன்வைக்கத்தான் செய்வார்கள். எங்களிடம் இருக்கும் நிர்வாகிகள் சுயவிருப்பத்தில் தான் உள்ளனர்’ என்று கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘சசிகலா, தினகரன் ஆகியோரை தவிர மற்றவர்கள் வந்தால் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். நாங்கள் அ.தி.மு.க.வில் சேர அவர்களிடம் விண்ணப்பம் வழங்கவில்லை. எல்லாம் பதவி படுத்தும் பாடு. அதிகாரம் கொடுக்கும் மமதையால் ஜெயக்குமார் இவ்வாறு பேசுகிறார்’ என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்