மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் - ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேச்சு

மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என மக்களவையில், ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.

Update: 2019-07-03 22:30 GMT
புதுடெல்லி,

மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

எனது தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் வரும் மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான அகல ரெயில் பாதை அமைப்பதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 90.41 கி.மீ. தொலைவு கொண்ட இத்திட்டம் நீண்ட காலமாக தாமதமாகி கொண்டே வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ரூ.302.90 கோடி அகல ரெயில் பாதை திட்ட பணிக்கான ஒப்புதல் வழங்கியது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் செய்யப்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்யாததின் காரணமாக பணிகள் மிக மெதுவாகவும், மெத்தனமாகவும் நடந்து வருகின்றன.

எனவே மேலும் காலதாமதம் இல்லாமல் தேவையான நிதி ஒதுக்கீட்டுடன் அகல ரெயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடித்து மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான ரெயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்