இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி

இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

Update: 2019-07-07 12:16 GMT
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தை எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் குறைந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் இத்தாக்குதலை அடுத்து பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி வழங்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது இப்போது தங்களுடைய தளங்களை ஆப்கானிஸ்தானில் உள்ள கனார், நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் காந்தகார் மாகாணங்களுக்கு மாற்றியுள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து காபூல் மற்றும் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் ஹக்கானி நெட்வோர்க் மற்றும் தலிபான் பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவியை செய்கிறது எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்