கார் மீது அரசு பஸ் மோதல்: சென்னை பக்தர்கள் 4 பேர் உடல் நசுங்கி சாவு

நகரி அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து விட்டு வந்த சென்னையை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-07-23 22:00 GMT
நகரி,

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர்கள் ஜனா, அனந்தகுமார், பாலாஜி, மதுமிதா மற்றும் கண்ணம்மா. உறவினர்களான இவர்கள் 5 பேர் உள்பட 6 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். பின்பு அவர்கள் நேற்று கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்பு அதே காரில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் ஆந்திர மாநிலம் நகரி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. பஸ் மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

அதில் இருந்த 6 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கிக் கொண்டனர். விபத்து ஏற்பட்டதும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கு திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நகரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதன்பின்னர் போலீசாரும், பொதுமக்களும் காரின் உள்ளே சிக்கி இருந்தவர்களை வெளியே மீட்டனர். அப்போது ஜனா, அனந்தகுமார், பாலாஜி மற்றும் காரை ஓட்டிய டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மதுமிதா, கண்ணாம்மாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நகரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நகரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்