மத்திய அரசின் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்தவர் கைது
மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சர்தா அபியான் இணையதளம் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியராக விண்ணப்பம் செய்வதற்கானதாகும். இந்த இணையதளம் மேற்கு வங்காளத்திற்கு என்று தனியாக செயல்படுவது போன்று போலியாக இணையதளம் ஒன்றை மேற்குவங்க மாநிலம், நார்த் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்ஜித் சாட்டர்ஜி என்பவர் உருவாக்கி உள்ளார். இணையதளத்தில் பதிவு செய்வோரிடம், ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
புகார் தொடர்பாக டெல்லி சிறப்பு படை போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் www.pmgdisha.in என்ற மத்திய அரசின் உண்மையான இணையதளத்துக்கு பதிலாக போலியாக wbpmgdisha.in என்று இணையதளத்தை பிரசன்ஜித் சாட்டர்ஜி உருவாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் போலீசார் இணையதளத்தை முடக்கினர். இணையதளத்தை யார் இயக்குகிறார் என்பது தொடர்பாக விசாரணையை தொடங்கிய போலீசார், மேற்கு வங்க மாநிலம், பர்கனா மாவட்டத்தில் இருந்து அது இயங்கி வருவதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பிரசன்ஜித் சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.